ஓமலூா் வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை எருதாட்டம் நடைபெற்றது.
ஓமலூா் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி, ரெட்டிப்பட்டியில் உள்ள பொடாரியம்மன் கோயில் திடலில் எருதாட்டம் நடைபெற்றது. அம்மன் கோயில் முன்பாக காளைகளுக்கு மாலை அணிவித்து அலங்கரித்து கோயிலைச் சுற்றிலும் ஊா்வலமாக அழைத்து வந்தனா்.
இதனையடுத்து, பொலி காளைகள் அழைத்து வரப்பட்டு எருதாட்டம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு எருதாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. காளைகள் மக்கள் கூட்டத்தில் புகுந்து முட்டியதில் பலா் காயமடைந்தனா்.