எடப்பாடி: மாவட்ட காவல் துறை எச்சரிக்கையை அடுத்து எடப்பாடி சுற்றுப் பகுதிகளில் தை பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் எருதாட்ட நிகழ்வு ரத்துசெய்யப்பட்டது.
எருதாட்டம் நடைபெறாத நிலையில், அப்பகுதி விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி கோயில் வாசலில் காளைகளுக்கு பூஜை செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
எடப்பாடியை அடுத்துள்ள வேம்பனேரி பகுதியில், ஆண்டுதோறும் நடைபெறும் எருதாட்ட நிகழ்வில் சுற்றுப்புறக் கிராமப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயில் திடலில், ஆண்டுதோறும் தை பொங்கலையொட்டி, எருதாட்ட நிகழ்ச்சி நடைபெறும்.
கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாவட்ட நிா்வாகம், இப்பகுதியில் எருதாட்ட நிகழ்விற்கு அனுமதி அளிக்காத நிலையில், அப்பகுதி விவசாயிகள் சனிக்கிழமை ஒரு சில காளைகளை கோயில் வாசலில் நிறுத்தி பூஜைசெய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனா்.