வாழப்பாடி அருகே, சேலம்-சென்னை புறவழிச்சாலையில், கன்டெய்னர் லாரி மோதி விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி மகன் ஜெகன் (29). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று சனிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில், சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி புதுப்பாளையம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகனை மீட்ட வாழப்பாடி காவல்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் சேலம் அயோத்தியாபட்டணம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.