வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில், பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில், காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஆண்டு தோறும், மார்ச் 24, உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு, வாழப்பாடி அடுத்த பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயிலாக இருவாரங்களுக்கு வட்டார அளவில் பொதுமக்களுக்கு காச நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் சனிக்கிழமை நடைபெற்ற இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
சேலம் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் மருத்துவர் கணேஷ் காசநோய் பரவும் விதம் சிகிச்சை மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார். முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் சதாசிவம் காசநோய் பரவும் விதம் குறித்தும், காசநோய் சிகிச்சை நலக்கல்வியாளர் தங்கராஜ், பரிசோதனை முறைகள், அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்தும் விளக்கமளித்தனர்.
ராம்கோ நிறுவன பணியாளர்கள், ரீச் அரசு சாரா தொண்டு நிறுவன காசநோய் தன்னார்வலர்கள் கவிதா, சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ராம்கோ சிமெண்ட் பணியாளர்கள் சீனிவாசன், முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக கணக்குத்துறை மேலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.