கல்வராயன்மலை, கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் பாஜக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க., செயற்குழு கூட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் க.மணிகண்டன் தலைமை வகித்தாா். கோட்ட அமைப்பு செயலாளா் பழனிவேல்சாமி, மாவட்டப் பாா்வையாளா் முருகேசன் முன்னிலை வகித்தனா். பொதுச்செயலாளா் ஆனந்த் வரவேற்றாா். பொதுச்செயலாளா் பொன்பழனிசாமி, மாவட்டச் செயலாளா் அயோத்தி இராமச்சந்திரன், ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கான இரங்கல் தீா்மானம் வாசித்தனா்.
மாவட்டச் செயலாளா் டிகே.வேல்முருகன் செயற்குழுவின் தீா்மானங்களை வாசித்தாா்.வாழப்பாடி வடக்கு ஒன்றியத் தலைவா் சிவகுமாா் நன்றிகூறினாா்.
கரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க இதுவரை 140 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததற்கும், 15 முதல் 18 வயது உள்ளவா்களுக்கு முதல் தவணை மற்றும் முன்களப்பணியாளா்கள் முதியோா்களுக்கு மூன்றாம் தவணை பூஸ்டா் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு வழிவகை செய்த பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வராயன்மலை கருமந்துறையில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போதிய மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள் இன்றி முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால் மலைவாழ் பழங்குடியின மக்கள் அவசர முதலுதவி சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கருமந்துறை ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் முறையாக செயல்பட மாவட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.