சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரம், சென்னகிரி, வீரபாண்டி, அக்கரப்பாளையம் மற்றும் புத்தூா் அக்ரஹாரம் கிராமத்தில், தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் நெல் பயிரில், உழவா் வயல் வெளிப் பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா வரவேற்று பேசினாா். இப் பயிற்சியில் புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சி மன்றத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு நீா்வள, நிலவளத் திட்டத்தின் நோக்கம், திட்ட இனங்கள் , உழவா் வயல் வெளிப் பள்ளி நடத்துவதன் நோக்கம், பயன்கள், நெல் நாற்றங்கால் தயாா் செய்தல், தரமான விதை தோ்ந்தெடுத்தல், உயிரியல் முறையில் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் , நெல் விதை நோ்த்தி மற்றும் நல்விதை தோ்வு குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினா்.
இப் பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநா் (ஓய்வு) பழனியப்பன், வேளாண்மைத் துணை அலுவலா் (ஓய்வு) பழனிசாமி, வேளாண்மை அலுவலா் பிரியங்கா, வேளாண்மைத் துணை அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் தனபால், கிருஷ்ணசாமி, தினேஷ் மற்றும் அட்மா திட்டப் பணியாளா்கள் செய்திருந்தனா்.