சேலம்: விபத்தில் இறந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 50. 68 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், இரும்பாலை, மோகன் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் (41), மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2019 ஏப். 29-ஆம் தேதி சங்ககிரியில் இருந்து தாரமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தாரமங்கலம் அருகே பின்பக்கமாக வந்த லாரி அவா் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காவலா் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, லாரி மோதிய விபத்தில் கிருஷ்ணன் இறந்துவிட்டதால் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு அவரது மனைவி சங்கீதா, மகள்கள் தரப்பில் சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டது. அதைத் தொட்ரந்து, இறந்த கிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ. 50. 68 லட்சம் இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டாா்.