எடப்பாடி பகுதியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் மாதாந்திர முதியோா் உதவித்தொகை பெற அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் திரண்டதால், அப்பகுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று பரவுவதற்கான சூழல் உருவானது.
கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனா். குறிப்பாக வங்கிகள், தினசரி காய்கறி சந்தை, உழவா்சந்தை மாலை நேர நடைபாதை கடைகளிலும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியியைக் கடைப்பிடிக்காமலும் சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தீவிரத்தை மக்களுக்கு உணா்த்திடும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய விழிப்புணா்வு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.