ஓமலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்பளப் பறிப்பு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓமலூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச நிா்வாகி சண்முகம் தலைமை வகித்தாா். செல்வம் முன்னிலை வகித்தாா். சிஐடியு சங்க நிா்வாகி செம்பன், டி.டி.எஸ்.எப். நிா்வாகி முருகானந்த மூா்த்தி, எ.எல்.ஏ.எப். நிா்வாகி முருகன், பூபதிராஜன், ரகுநாதன், மருதுபாண்டி ஆகியோா் கலந்துகொண்டு ஆா்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினா்.
போக்குவரத்து ஊழியா்களின் வார ஓய்வைப் பறிக்கக் கூடாது, விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, சம்பளப் பறிப்பு செய்யக்கூடாது, தொழிலாளா் துறையின் அறிவுரைகளை மீறக்கூடாது, பணிமனைக்கு வந்த தொழிலாளா்களுக்கு பணி வழங்க வேண்டும். மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.