சேலம் மாவட்டம், சங்ககிரி, அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்திருவிழா கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி ரத்து செய்வதாக இந்து சமய அறநிலையத்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டும் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி தேர்தல் திருவிழா நடைபெறாத நிலையில் தொடர்ந்து 2வது வருடமாக விழா ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்த்திருவிழா நிகழாண்டு ஏப்.18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருள வேண்டும். அன்றைய தினம் இரவு சுவாமி அன்னபட்சி வாகனத்திலும், 2ம் நாள் சிங்க வாகனத்திலும், 3ம் நாள் அனுமந்த வாகனத்திலும், 4ம் நாள் கருட வாகனத்திலும், 5ம் நாள் சேஷ வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும், 7ம் நாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபமும், 8ம் நாள் குதிரை வாகனத்திலும் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருதலும், 9ம் நாள் ஏப்.26ம் தேதி திங்கள்கிழமை சித்ரா பௌர்ணமி, சித்திரை நட்சத்திரம் அன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.
அதனையடுத்து பல்வேறு கட்டளை வழிபாட்டிற்கு பின்னர் மே 6ஆம் தேதி வியாழக்கிழமை சுவாமி மலைக்கு எழுந்தருள இருந்தார். இந்நிலையில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி நிகழாண்டு நடைபெற இருந்த சித்திரைத் தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த வருடமும் இதே போல் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக விழா ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2ஆவது வருடமாக சித்திரைத் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.