சேலம் மாநகரில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஊடுருவியுள்ளனா் என பொய்யான செய்தியை பொதுமக்களிடையே பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
சேலம் மாநகரில் குழந்தைகள் கடத்தும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 400 போ் முகாமிட்டு உள்ளதாகவும், அவா்கள் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளைக் கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி மூலமாக தவறான செய்தி வேகமாக பரவி வருகிறது.
இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். இதை பொதுமக்கள் யாரும் நம்பி பீதி அடைய வேண்டாம். இந்த விடியோவானது கடந்த 2018, 2019 ஆண்டுகளிலும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, 2018, 2019-இல் சேலம் மாநகர காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு செய்தி வெளியிட்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த விடியோவை சிலா் பரப்பி வருகின்றனா்.
இதுபோன்ற பொய்யான வதந்திகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சட்ட விரோதமான செயலாகும். இதுபோன்ற பொய்யான தகவல்கள், வதந்திகளை பொதுமக்களிடையே பரப்புவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற பொய்யான வதந்திகளை பரப்புவோா் பற்றியோ, சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்தோ தகவல் தெரியவந்தால், பொதுமக்கள் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என சேலம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.