மேட்டூா் அணை பூங்காவில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேட்டூா் அணை பூங்காவும் ஒன்று. சேலம் மாவட்டம் மட்டுமன்றி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கா்நாடக மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்து செல்கின்றனா்.
கரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனா்.
பூங்கா நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பூங்கா நுழைவாயில், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், சுற்றுப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மேட்டூா் அணை பூங்கா பல மாதங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.