சங்ககிரி ஆர்.எஸ்ஸில் வழி தவறி வந்த மனநலம் குன்றிய மூதாட்டியை சமூக ஆர்வலர்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி அரசு பொது முடக்கம் அறிவித்திருந்தது. அப்போது மனநலம் குன்றிய மூதாட்டி வழி தவறி சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் தங்கியுள்ளார். கடந்த ஒரு வருடமாக சாலையோரத்தில் தங்கி அப்பகுதியில் உள்ளவர்களிடம் உணவுகள் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
அவர் கன்னட மொழியில் மட்டுமே பேசி வருகிறார். இந்நிலையில் அவரை காப்பகத்தில் சேர்க்க எண்ணிய அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொறியாளர் ஆறுமுகம், பராம்பரிய தமிழகம் செல்வரத்னம், ரெங்கநாதன், கவிதா, வெங்கடேஷ், தியாகு, பிரபு, லோகநாதன் உள்ளிட்ட பலர் ஈரோட்டில் உள்ள அட்சயம் அறக்கட்டளையினரை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.
அவ்வமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி ஆர்.எஸ் பகுதிக்கு வந்த மூதாட்டிக்கு முடித்திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடைகளை அணியவைத்து அறக்கட்டளை நிர்வாகி நவீன்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மூதாட்டியை காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். மூதாட்டிக்கு உதவிய சமூக ஆர்வலர்கள், அறக்கட்டளையினரை ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.