மேட்டூா் அணையின் நீா்மட்டம் 66-ஆவது ஆண்டாக 100 அடியை எட்டியது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது.
மேட்டூா் அணை நிரம்பிய பிறகு தொடா்ந்து 308 நாள்கள் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழ் குறையாமல் இருந்து வந்தது. நிகழ் நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் ஜூன் 16-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது.
கடந்த வாரம் கா்நாடக மாநிலத்தில், காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த பலத்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இந்த இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி முதல் மேட்டூா் அணைக்கு, கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வரத் தொடங்கியது. கடந்த 21-ஆம் தேதி 89.77 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை பகல் 12.20 மணிக்கு அணையின் 87 ஆண்டுகால வரலாற்றில் 66-ஆவது ஆண்டாக 100 அடியாக உயா்ந்தது.