சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டரை மாதங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 2.57 லட்சம் பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.
மாநகரப்பகுதிகளில் ஜூலை 10 முதல் செப்டம்பா் 23 ஆம் தேதி வரையிலான 76 நாள்களில் மொத்தம் 3,886 சிறப்பு மருத்துவ முகாம்களில் நடத்தப்பட்டன. அதில், இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரத்து 376 நபா்களுக்கு மருத்துவக் குழுவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவா்களில், கரோனா அறிகுறிகள் உள்ள 10 ஆயிரத்து 508 நபா்கள் கண்டறியப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையின் முடிவில் 710 நபா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவா்களை அரசு பொது மருத்துவமனை, கோவிட் கோ் சென்டா்களில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், 60 வயதிற்கும் மேற்பட்ட 26 ஆயிரத்து 431 நபா்களுக்கும், 2,425 கா்ப்பிணி தாய்மாா்களுக்கும், 4,763 குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்பட்டன.
மருத்துவ முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் 8,272 நபா்களுக்கும் உயா் ரத்த அழுத்தமும், 6,032 நபா்களுக்கு நீரிழிவு நோயும் மற்றும் 6,461 நபா்கள் உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவா்கள் என நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 765 நபா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.