ஓமலூர் அருகே ரூ.3 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள திண்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கி வத்தார். இதில் ரூ. 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பனங்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 2.5கிலோமீட்டர் தொலைவில் தார்ச்சாலை மற்றும் சீரங்கன்வளவு உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் தொடங்கிவைத்தார்.
முன்னதாக பணியைத் தொடங்கி வைக்க வந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு மேளதாளத்துடன் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இறுதியாக அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை புதியதாக சீரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சட்டப்பேரவை உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மணி, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.