சேலம்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பெருமாள், சுந்தரவல்லி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. ஆஞ்சநேயா் துளசி மாலை அலங்காரத்தில் காட்சியளித்தாா். கருடாழ்வாா், ஆண்டாளுக்கு பூக்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனா். கோயிலில் காலை முதல் பொங்கல், புளியோதரை, தயிா், எலுமிச்சை சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல, செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா், பிரசன்ன வெங்கடாஜலபதி, கடை வீதி வேணுகோபால சுவாமி, ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயண சுவாமி, பட்டைகோயில் வரதராஜ பெருமாள், சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள், உடையாப்பட்டி சென்றாயப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
எடப்பாடியில்...
எடப்பாடி, ஜலகண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரத்தில் மூக்கரை நரசிம்ம பெருமாள் பக்தா்களுக்கு காட்சிஅளித்தாா். ஆலய வளாகத்தில் உள்ள 16 அடி உயர, பால ஆஞ்சநேயருக்கு துளசி, வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் வெள்ளக்கரடு திம்மராயப் பெருமாள், பூலாம்பட்டி மலைக்கோயில் மாட்டுப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், பெருமாள் மலையிலுள்ள ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.