மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,079 கன அடியாகச் சரிந்துள்ளது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழையின் அளவு குறைந்து வருகிறது. இதனால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 13,001 கன அடியாக இருந்த நிலையில், சனிக்கிழமை காலை நொடிக்கு 12,079 கன அடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 90.84 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 12,079 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 53.61 டி.எம்.சி.யாக இருந்தது.