மேட்டூா், செப். 18: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்ததால் கடந்த 14-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 6,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18,000 கனஅடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூா் அணையின் நீா்மட்டம் 91.35அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 13,001 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 700 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 54.20 டி.எம்.சியாக இருந்தது.