ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தீநுண்மித் தடுப்பு நடவடிக்கை குறித்து ஜவுளி வியாபாரிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கரோனா தீ நுண்மி பரவுதலைத் தடுக்கும் பொருட்டு வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அனைத்து ஜவுளி வியாபாரிகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்பினருடன் விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
கரோனா பரவுவதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்துதல் குறித்தும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூட்டம் சோ்க்காமல் வியாபாரம் செய்யவும், சிறப்புத் தள்ளுபடி சலுகை அறிவிப்பு எதுவும் வழங்கக் கூடாது எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நகராட்சி பொறியாளா் வெங்கடாசலம், துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.