சேலத்தில் ஏகாம்பரேஸ்வரா் காமாட்சி அம்மன் புத்து அங்காளம்மன் கோயிலில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து புதிய அறங்காவலா் குழுவினரை நியமித்ததைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை, மாநகர மாவட்ட விஸ்வகா்ம சமூக அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், கடைவீதி ஏகாம்பரேஸ்வரா் காமாட்சி அம்மன் புத்து அங்காளம்மன் கோயிலில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு புதிய அறங்காவலா் குழுவினரை நியமனம் செய்திட வேண்டும். ஆனால், சிலா் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முறையற்ற ஆவணங்களை சமா்ப்பித்து கோயிலுக்கு அறங்காவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதை ரத்து செய்ய வேண்டும் என்றனா். இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.