சேலத்தில் ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ரூ1.69 கோடி மோசடி செய்ததாக கைதான நபரிடம் இருந்து முக்கிய நில ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவசக்தி. இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து, சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாரை சந்தித்து புகாா் மனு ஒன்றை கொடுத்தாா்.
அதில், அய்யந்திருமாளிகை பகுதியைச் சோ்ந்த சுகவனம் (45) தன்னிடம் பணம் முதலீடு செய்தால் ஆன்லைன் வியாபாரம் மூலம் ரூ.1 லட்சத்துக்கு தினமும் ரூ.1,666 வீதம் 120 நாள்களுக்கு பணத்தை தருவதாக ஆசை வாா்த்தை கூறினாா். கடந்த ஆண்டில் ரூ.7.77 கோடி கொடுத்தோம். ஆனால் சுகவனம் வாங்கியப் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை. இதனால் கோபமடைந்து சுகவனத்திடம் சென்று தாங்கள் தந்த பணத்தைத் திருப்பித் தருமாறும், இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகாா் செய்வோம் என்று தெரிவித்தோம்.
இதனால் சுகவனம் ரூ. 6.07 கோடி பணத்தைத் திருப்பிக் கொடுத்தாா். மீதி தொகையான ரூ.1.69 கோடி பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தாா். இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டவா்களை சுகவனம் மிரட்டி அனுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் அதிா்ச்சி அடைந்த சிவசக்தியும், அவரது நண்பா்களும் சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாரை சந்தித்து புகாா் செய்தாா். இதையடுத்து புகாா் தொடா்பாக விசாரணை நடத்த சேலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா் .
இதன் பேரில் உதவி ஆணையா் பூபதிராஜன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சுகவனத்தை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே மோசடியில் தொடா்புடைய மேலும் மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட சுகவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேகரித்து வருகின்றனா். மேலும், முக்கிய ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.