சேலம்

இனிப்புக் கடை கிடங்கில் 3 டன் நெகிழி பொருட்கள் பறிமுதல்: ரூ. 2.50 லட்சம் அபராதம்

20th Oct 2019 02:15 AM

ADVERTISEMENT

சேலம் அம்மாபேட்டை அரசமரம் பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் உள்ள தனியாா் இனிப்புக் கடைக்கு சொந்தமான கிடங்கில் 3 மெட்ரிக். டன் அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதைத் தடுக்க, சேலம் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி ஆணையாளா் உத்தரவின் பேரில் இக் கண்காணிப்பு குழுவினா் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், செல்லிடப்பேசி கடைகள், தேநீா் விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் திடீா் ஆய்வின் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் அம்மாபேட்டை தோ் வீதி பகுதியில் உள்ள அரச மரம் பிள்ளையாா் கோயில் தெருவில் ஆணையாளா் ரெ. சதீஷ் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

அப் பகுதியில் இயங்கி வந்த தனியாா் இனிப்புக் கடைக்குச் சொந்தமான கிடங்கில் 3 மெட்ரிக். டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அதனடிப்படையில் கடந்த 9 மாதங்களில் 4,303 கடைகளில் 51 ஆயிரம் கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 33.19 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் பறிமுதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்பேரில் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கொண்டு தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

ஆய்வின் போது மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையாளா் ஆா்.கவிதா, சுகாதார ஆய்வாளா் ஆா்.சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT