கெங்கவல்லி அருகே வீரகனூரில் சனிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததில் புளியமரம் சாய்ந்து டிராவல்ஸ் வேன் சேதமடைந்தது.
வீரகனூரில் மாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக பழமையான வேர்ப் பகுதி வலுவிழந்து புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
இதில் அந்த புளிய மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனம் (டிராவல்ஸ்) ஒன்றும், பேரூராட்சிக்குச் சொந்தமான குடிநீர் விநியோகிக்கும் சின்டெக்ஸ் டேங்க் ஒன்றும் சேதமடைந்தன.
முன்னதாக வீரகனூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் மற்றும் கல்லூரிகளின் சார்பாக ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளும் சூறைக்காற்றில் பறந்தன. கடந்த 10 நாள்களுக்கு முன் வீரகனூர் பேருந்து நிலையத்தில் அண்ணா சிலையைச் சுற்றிலும் முன் அனுமதி பெறாமல் தகர மறைப்புக் கட்டப்பட்டு இருந்தது.
வீரகனூர் போலீசார் எச்சரிக்கையை அடுத்து அந்தத் தகர மறைப்பு அகற்றப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக சேதங்கள் தடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வீரகனூர் பொதுமக்கள் கூறியது:
அடியோடு விழுந்த புளியமரம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மரத்தை அகற்றாமல் விட்டுவிட்டனர் என்றனர்.