சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சேலம்-அரூர் சாலையில் திரண்டனர். பின்னர் முறையாக குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியது:
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு ஆச்சாங்குட்டப்பட்டி, அடிலைபுதூர், சத்திரப்பட்டி, செங்காடு, முள்ளுவாடி கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த ஒரு மாதமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஆழ்துளைக் கிணறு மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறோம். எனவே, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியர் மகேஸ்வரன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் செய்தனர்.
உயரதிகாரிகளிடம் பேசி முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.