சேலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
சேலம் மாமாங்கம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர், தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். சோனா கல்லூரி எதிர்ப் பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு இனிப்பு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றாராம். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் தங்கராஜ் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சூரமங்கலம் போலீஸார் நிகழ்விடம் விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் அப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களில் மர்ம நபர்களின் படம் பதிவாகியிருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.