ஓய்வு பெறும் வரை அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என நீதிபதி ரவிச்சந்திரன் அறுவுறுத்தினார்.
சேலம் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ரவிச்சந்திரன் திருச்சி லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு ஆணைக்குழு அலுவலக ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி ரவிச்சந்திரன் பங்கேற்றுப் பேசியது:
பொதுமக்களுக்கு சேவை செய்யும் இடத்தில் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். எனவே ஓய்வுபெறும் வரை நீங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் இங்கு பணியாற்றி உள்ளேன். என்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்துள்ளேன். எனக்கு நீங்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தீர்கள் என்றார்.
விழாவில் முதுநிலை நிர்வாக உதவியாளர்கள் பரிமளா, பத்மபிரியா, ராமன் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.