ஓமலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓமலூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த முகாமில் சார்பு நீதிமன்ற நீதிபதி தயாநிதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) மருத சண்முகம், குற்றவியல் நடுவர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டு நிலுவை வழக்குகளை விசாரித்தனர். இதில், வழக்குகளில் தொடர்புடைய பலரும் கலந்துகொண்டு வழக்குகளின் தன்மைகள் குறித்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் விசாரித்து எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் சுமார் 60 - சதவீத வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், விவகாரத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டனர். வழக்குகளில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த முகாமில் வங்கிகள், தனியார் நிறுவனத்தினர் உள்பட பலரும் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை தீர்த்து கொண்டனர்.