கல்வியுடன் தொழில்நுட்பத்தையும் சேர்த்து மாணவர்கள் பயிலும்போது, அதன் மதிப்பு உயர்கிறது என்று கேரளப் பல்கலைக்கழக டீன் ஜி.ராஜ் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை சார்பில் முதலமாண்டு முதுகலை வணிகவியல் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஜி.ராஜ் பேசியது:-
பொறியியல் கல்விக்கு இருக்கும் அளவுக்கான வரவேற்பு கேரளத்தில் கலைத்துறை படிப்புகளுக்கு கிடைத்துள்ளது.
பி.காம். போன்ற படிப்புகளுக்கு அதிக மவுசு நிலவுவதால் ரூ.5 லட்சம் வரை நன்கொடை கொடுத்து சேர்க்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
கலைப்படிப்புகளை நாடி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வியுடன் தொழில்நுட்பத்தைச் சேர்த்து பயிலும்போது, அதன் மதிப்பு பன்மடங்கு உயர்கிறது.
வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்களும் மாணவர்களின் மதிப்பெண்களைவிட அவர்களின் திறமையைப் பார்த்து விட்டுதான் பணி வாய்ப்பை
வழங்குகின்றனர்.
எனவே மாணவர்கள் தங்களது துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
முகாமுக்கு துறைத் தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார். இணைப் பேராசிரியர் கே.கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் எஸ்.சண்முகசுந்தரம், அ.ஜெயக்குமார், உதவிப் பேராசிரியர்கள் ஆர்.கவிதா, எம்.சுகுணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.