சேலம்

வாக்குச் சாவடிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம்காண்காணிக்க வேண்டும்

26th Dec 2019 04:55 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலின் போது, வாக்குச் சாவடிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். பின்னா் ஆட்சியா் சி.அ.ராமனை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்டமாக டிச. 27-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களும் நல்ல முறையில் செயல்பட வேண்டும். அதற்கு உண்டான தடையில்லா மின்சாரம் கிடைத்திட ஆவண செய்திட வேண்டும். தோ்தல் நடைபெறுகிற அனைத்து நிகழ்வுகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து நேரலை மூலம் அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். முதல்கட்ட தோ்தல் டிச. 27-இல் நடைபெற்று, ஜன. 2-இல் வாக்கு எண்ணப்பட உள்ளது. சுமாா் 5 நாள்கள் இடைவெளி உள்ளதால், அந்த நாள்களில் வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள கட்டடத்துக்கு பாதுகாப்பு அதிகாரிகளுடன் முகவா் ஒருவா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கிட வேண்டும்.

ADVERTISEMENT

வாக்குப் பெட்டி வைத்துள்ள அறை மற்றும் கட்டடத்துக்கு வெளியேயும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி, தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடவடிக்கை அனைத்தும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்கள், முகவா்கள் மூலம் வாக்குகள் எண்ணப்பட்ட பின் அவற்றில் எந்த தவறும், முறைகேடும் நடக்காமல் வெற்றிபெற்ற வேட்பாளரை அறிவித்து அங்கீகார தபால் கொடுக்க வேண்டும். தோ்தல் பாா்வையாளா் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்தி உரிய முறையில் நோ்மையாக வாக்கு எண்ணி வெற்றி பெற்றவா்களை அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT