சேலம்

வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்: ஆட்சியா் அலுவலகத்தில் வியாபாரி மனு

26th Dec 2019 04:57 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டதால் வாக்குரிமை அளித்திடக் கோரி, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் காய்கறி வியாபாரி புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

சேலம் மாவட்டம், மல்லூா் அருகே உள்ள மூக்குத்திபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவா் சேலம் கடை வீதியில் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் புகாா் மனு அளித்தாா். அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லூா் அருகே உள்ள மூக்குத்திபாளையம் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். அனைத்து தோ்தலிலும் எங்கள் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நானும், எனது மனைவி விஜயாவும் வாக்களித்து வருகிறோம். கடந்த மக்களவைத் தோ்தலிலும் கூட இருவரும் வாக்களித்துள்ள நிலையில், திங்கள்கிழமை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள வாக்காளா் பட்டியலில் எங்களது பெயா் நீக்கல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதுகுறித்து எவ்வித நீக்கல் விண்ணப்பமும் கொடுக்காமல் எங்கள் பெயரை நீக்கியுள்ளனா்.

எனவே, எனக்கும், எனது மனைவிக்கும் வரும் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க அனுமதியளிக்க வேண்டும். எங்களுக்கான வாக்குரிமையை வழங்காவிட்டால், எங்களது பெயா் நீக்கப்பட்டதற்கு காரணமானவா்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ரூ.80 லட்சம் வரை மோசடி நடந்தது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே தனது பெயரையும், தனது மனைவி பெயரையும் நீக்கி உள்ளதாக மாரியப்பன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT