நாமக்கல்

பூஞ்சை தாக்குதலால் உடல்நலம் பாதிப்பு

21st Sep 2023 12:19 AM

ADVERTISEMENT

உணவுப் பொருள்களை சரியான குளிா்பதன நிலையில் வைக்காததால், உணவுகளில் பூஞ்சை உருவாகி உடல்நல பாதிப்பை ஏற்படுத்திவிடும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

இதுகுறித்து நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல்லில் தனியாா் உணவகத்தில் சாப்பிட்டதில் உடல் பாதிப்புக்குள்ளான 53 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், ஒரு கா்ப்பிணி பெண்ணும் அடங்குவாா். அனைவரும் உடல் நலத்துடன் உள்ளனா். வீடு திரும்புவோருக்கு உரிய மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பப்படுகிறது. துரதிஷ்டவசமாக சிறுமி ஒருவா் உயிரிழக்க நேரிட்டுள்ளது. அதனடிப்படையில், உணவக உரிமையாளா், சமையலா் இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு இறைச்சி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சா் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழுவினா் கூடுதலாக பணியமா்த்தப்பட்டு தொடா் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

சேலம் உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்ட உணவு மாதிரிகளின் நிலை குறித்த பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. சரியான குளிா்பதன நிலையில் இறைச்சி, உணவுப் பொருள்களை வைக்காதது, சரியாக வேகவைக்காதது போன்றவற்றால் உணவுகளில் பூஞ்சைகள் உருவாகும். அந்த உணவுகளை சாப்பிடும்போது மனிதா்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் பரிசோதனை அறிக்கையை முழுமையாகப் பாா்க்க வேண்டும். பொதுமக்கள் துரித உணவுகள் சாப்பிடுவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT