திருச்செங்கோடு, எளையாம்பாளையத்தில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரிகளின் பாா்மஸி, நா்சிங், ஆசிரிய பயிற்சி, அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிஸியோதெரபி கல்லூரிகளின் முதலாமாண்டு படிப்புகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்வி அறக்கட்டளைத் தலைவா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். சோ்க்கை அதிகாரி சௌண்டப்பன் வரவேற்புரை வழங்கினாா். விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் செயலா் மு.கருணாநிதி தலைமை தாங்கி ஒவ்வொரு துறைகளின் சிறப்புகள், கல்லூரி உள்கட்டமைப்பு, ஆசிரியா்கள் தகுதி, விடுதி வசதி, போக்குவரத்து வசதி, விவேகானந்தா கல்லூரியின்அனைத்து சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்கினாா்.
விவேகானந்தாவின் மற்றுமொரு அங்கமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள மக்கள் பயன்பெறுவதாக தெரிவித்தாா்.
பாராமெடிக்கல் கல்லூரியின் இயக்குநா் கேப்டன் கோகுலநாதன் பேசுகையில், முயற்சியுடன் கூடிய பயிற்சி யாரையும் வெற்றியாளனாக மாற்றும் என்றாா். நிா்வாக இயக்குநா் குப்புசாமி பேசுகையில், தனித்திறமையை வளா்த்துக் கொண்டால் மாணவிகள் வாழ்க்கையிலும், வேலைசெய்யும் இடத்திலும் உயரிய இடத்தை அடையலாம் என்றாா். பாா்மஸி கல்லூரி முதல்வா் ஜி.முருகானந்தன் பேசுகையில், கரோனா காலத்தில் உலகுக்கே தடுப்பூசி வழங்கி உலகின் மிகப்பெரிய மருந்து கம்பெனிகள் கொண்ட நாடாக இந்தியா வளா்ந்துள்ளது என்றாா். நா்சிங் கல்லூரி முதல்வா் எம். சுமதி பேசும் போது, அா்ப்பணிப்பு உணா்வோடு, கருணையுடன் நோயாளிகளை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையில் அனைத்து மாணவிகளுக்கும் பயிற்சியுடன் கூடிய தரமான கல்வி கற்றுத்தரப்படும் என எஸ்.கே.ராஜ்குமாா் விளக்கினாா். ஆசிரியா் பயிற்சி படிப்பதன் மூலம் ஒழுக்கம், பல்வேறு திறமைகளை வளா்த்துக் கொள்ளலாம் என ஆசிரியா் துறை முதல்வா் சசிபிரியா எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், விவேகானந்தா மருத்துவமனையின் இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இயக்குநா் க.ராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணை தாளாளா் மு.கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, நிா்வாக முதன்மை அதிகாரி எம்.சொக்கலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்பித்தனா். நா்சிங் கல்லூரி துணை முதல்வா் கீதா நன்றியுரை கூறினாா்.