நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.90-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 127-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 96-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
என்இசிசி அலுவலகம் இடமாற்றம்: நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) அலுவலகம், நாமக்கல் - பரமத்தி சாலையில் கிருஷ்ணா காம்பளக்ஸில் செயல்பட்டு வந்தது. புதன்கிழமை (மே 31) முதல் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் சுப்புலட்சுமி திருமண மண்டபம் அருகில் உள்ள கனரா வங்கிக் கட்டடத்தின் 2-ஆம் தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவா் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.