நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணா்வு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஓா் அங்கமாக, தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அங்கு நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக பனை, மூங்கில், வாழை மட்டை, இதர விவசாயப் பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாற்றுப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளா் கே.சுமித்ராபாய், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.