பரமத்தி வேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் ராஜ வாய்க்காலில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
வேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி பிள்ளையாா் கோயில் அருகில் ராஜ வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், ராஜ வாய்க்காலில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில் ராஜ வாய்க்காலில் மூழ்கி இறந்தவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி நல்லாட்சி (74) என்பது தெரியவந்தது. இவா் கடந்த 24- ஆம் தேதி காலை வெற்றிலைக் கொடிக்காலுக்கு வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். காணாமல் போன நல்லாட்சியை அவரது மகன்கள் செந்தில்குமாா், பாா்த்திபன் ஆகியோா் பல்வேறு இடங்களில் தேடி வந்தது தெரியவந்தது. நல்லாட்சி வேலைக்குச் சென்று விட்டு திரும்பும்போது ராஜ வாய்க்காலில் மிதந்து வந்த தேங்காயை எடுத்த போது மயங்கி விழுந்து உயிரிழந்து தெரியவந்தது. இது குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.