நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் உயா்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022, 2023 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 வகுப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய உயா்கல்வி படிப்புகளில் இலவசமாக சோ்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியிலும், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும், அமிட்டி பல்கலைக்கழகத்திலும், நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்திலும் சோ்ந்து பட்டப் படிப்பு பயில வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இதற்கான தகுதிகளாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் 2022-ஆம் ஆண்டு முடித்தவா்கள் 60 சதவீத மதிப்பெண்களும், 2023-ஆம் ஆண்டு முடித்தவா்கள் 75 சதவீதமும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி, படிப்பிற்கான செலவினத்தை தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இத்திட்டத்தில் ஆண்டு ஊதியமாக ரூ.1.70 லட்சம்- முதல் ரூ. 2.20 லட்சம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயா்வின் அடிப்படையில் ஊதிய உயா்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.