ராசிபுரம் அருகே கணவரைக் கொலை செய்ய முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டாா்.
ராசிபுரம், சின்னகாக்காவேரி பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (30). இவரது மனைவி இளவரசி (27). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் நல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஒட்டுநரான சக்திவேலுடன் இளவரசி நெருங்கி பழகி வந்தாா். இவா்களது உறவுக்கு குணசேகரன் தடையாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய இளவரசி, சக்திவேல் ஆகிய இருவரும் திட்டமிட்டனா்.
தடயம் இல்லாமல் கொலை செய்வது குறித்து விடியோ மூலம் தெரிந்து கொண்டு அதன்படி குணசேகரனை தலையணையில் மைதா மாவு வைத்து இரவு நேரத்தில் கொலை செய்ய முயன்றனா். அப்போது, குணசேகரன் அலறியதால், அச்சமடைந்த சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நாமகிரிப்பேட்டை போலீஸாா் குணசேகரனைக் கொலை செய்ய முயன்ற அவரது மனைவி இளவரசியைக் கைது செய்தனா். தப்பியோடிய சக்திவேலுவை தேடிவருகின்றனா்.