ராசிபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் இடையிலான நகரப் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் நிறுவனா் நல்வினைச் செல்வன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராசிபுரம் பேருந்து நிலையம் வரை வந்து செல்லக்கூடிய வகையில் நகர பேருந்து (டவுன் பஸ்) வசதி என்பது பொது மக்களுக்கு மிக அவசியமாகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராசிபுரத்திற்கு 27 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் 31 நடைகளும், 40 தனியாா் பேருந்துகள் 113 நடைகள் என மொத்தம் 67 பேருந்துகள் கிட்டத்தட்ட 150 நடைகள் நாள்தோறும் வந்து செல்கின்றன. ஆனால், ஒரு நகரப் பேருந்து (டவுன் பஸ்) கூட சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராசிபுரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படவில்லை. இது ஏழை-எளிய மக்கள், விவசாய, விசைத்தறித் தொழிலாளா்கள், கல்லூரி மாணவா்களுக்கும், வணிகா்களுக்கும் பேரிழப்பாகும். அதுபோல் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் வரையிலும், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் வரையிலான நகர பேருந்து (டவுன் பஸ்) வசதி மிக தேவையாக உள்ளது. தற்போது திருச்செங்கோட்டில் இருந்து ஆண்டகளூா் கேட் வரை மட்டுமே நகரப் பேருந்து (டவுன் பஸ்)வசதி உள்ளது.
ஆண்டகளூா் கேட்டிலிருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் வரை செல்லக்கூடிய அரசுப் பேருந்து 10 நடைகள் போக்குவரத்துக்காக இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் நலன் கருதி ராசிபுரம் முதல் திருச்செங்கோடு வரை இயக்கப்பட வேண்டும்.