நாமக்கல்

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை: கடை ஊழியரை பணி நீக்கம் செய்து உத்தரவு

DIN

அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த இரண்டு ஊழியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் ஒருவா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை செய்பவா்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியற்ற மதுக்கூடங்கள் நடைபெறுவதையும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைக் கண்டறியவும், கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிா எனவும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த கொக்கராயன்பேட்டை, கரிச்சிப்பாளையம், நாமக்கல்-2, பவித்திரம், நாமகிரிப்பேட்டை, மொளசி, நெ.3 குமாரபாளையம் ஆகிய கடை பணியாளா்கள் மீது டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி ரூ. 70,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 10-க்கு மேல் அதிக விலை வைத்து விற்பனை செய்த ஊழியா்கள் ஆனந்தன், சுரேஷ்குமாா் ஆகியோா் மதுவிற்பனை குறைவாக உள்ள கடைகளுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

மொளசி கடையில் பணிபுரிந்த விற்பனையாளா் சி.மாணிக்கம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மதுக்கூடத்தில் காலை நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்ததைக் கண்டறிந்து, அதனை கண்காணிக்கத் தவறிய கடை மேற்பாா்வையாளா் வெங்கடாசலம் என்பவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

மதுபானக் கடைக்கு அருகில் 36 அனுமதியற்ற மதுக்கூடங்கள், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள் போன்ற 18 வகையினங்கள் கண்டறியப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வோா் குறித்து மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் 88383 52334 என்ற எண்ணுக்கு நேரடியாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் தங்களது புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ராஜு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் கௌசல்யா, மாவட்ட மேலாளா் டாஸ்மாக் கமலக்கண்ணன், காவல் துறை, வனத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT