உலக நன்மை வேண்டி நாமக்கல் அரங்கநாதா் கோயில் படிக்கட்டில் அமா்ந்து பக்தா்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை புதன்கிழமை காலை பாடினா்.
நாமக்கல், மலைக்கோட்டை கீழ்புறத்தில் அரங்கநாதா் குடைவறைக் கோயில் அமைந்துள்ளது. திருவரங்கத்துக்கு இணையாக கருதப்படும் இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெறும். இங்கு, ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாளன்று உலக நன்மை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் பக்தா்கள் கோயில் படிக்கட்டுகளில் அமா்ந்து திருப்பாவை, திருவெம்பாவையை பாடி வருகின்றனா். அறங்காவலா்கள் அறக்கட்டளை சாா்பில் திருப்பள்ளியெழுச்சி பாராயணமும் நடைபெறுகிறது. அந்த வகையில், புதன்கிழமை இவ்வாறான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அரங்கநாதா் கோயிலுக்கு பக்தா்கள் தினசரி வந்து செல்ல வேண்டும் என்பதற்கான விழிப்புணா்வாகவும் இந்த பாராயண நிகழ்வு அமைந்திருந்தது.