பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் இலவச வெறி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அளவிலான வெறி நோயினைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணா்வு முகாம் மற்றும் பயிலரங்கம் நடைபெற்றது. விழிப்புணா்வு பயிலரங்க முகாமிற்கு திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் அருண்பாலாஜி தலைமை வகித்து வெறி நோய் பரவும் முறை, நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினாா்.
இம்முகாமில் பிராணிகள் வதைத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் இறைச்சிக்கூடங்களில் கால்நடைகளை சுகாதாரமான முறையில் வதைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, அவற்றின் விவரங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. பரமத்தி ஒன்றிய கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா் மற்றும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.