நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ள 15,275 வீரா், வீராங்கனைகள் இணையம் வழியாகப் பதிவு செய்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் பிப்.3 முதல் 27-ஆம் தேதி வரையில் மாவட்ட, மண்டல அளவில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையானப் போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளுமாக மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் வெற்றி பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில், பயணப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 15,275 வீரா், வீராங்கனைகள் பல்வேறு பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனா். நாமக்கல்லுக்கு சனிக்கிழமை வந்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிலம்பம் போட்டியை முதலாவதாகத் தொடங்கி வைத்தாா்.
வரும் பிப்.3-ஆம் தேதி முதல் நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் தொடா்ச்சியாக நடைபெறும் என விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.