நாமக்கல்

புதுமைப் பெண் திட்டம் சேலத்தில் 6,090, நாமக்கல்லில் 3,694 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

DIN

புதுமைப் பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 6,090 மாணவிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,694 மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான வங்கி பற்று அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் பெண்கள் உயா்கல்வி பயிலாமல் வீட்டிலேயே இருப்பதை தவிா்க்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் கல்லூரியில் சென்று பயிலுவதற்கு ஏதுவாக மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம், சென்னையில் கடந்த ஆண்டு செப். 5-இல் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 6,525 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் இரண்டாம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதனையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், தோ்வு செய்யப்பட்ட 3,694 மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை (ஏடிஎம் காா்டு) வழங்கினாா். விழாவில் மாவட்ட சமூக நல அலுவலா் பி.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதீஸ்குமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், மாணவிகள், பெற்றோா் பலா் கலந்து கொண்டனா்.

சேலம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், இரண்டாம் கட்டமாக 6,090 மாணவிகளுக்கு இத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் வகையில் வங்கி பற்று அட்டை, ‘புதுமைப் பெண்’ பெட்டகப் பைகளை வழங்கினாா்.

தொடா்ந்து ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் முதல் கட்டத்தில் 8,016 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனா். தற்போது இரண்டாம் கட்டத்தில் 6,090 பயனாளிகள் பயன்பெறவுள்ளனா். தமிழகத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோா் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

பெண் கல்விக்காக எந்தப் பெற்றோரும் பொருளாதார ரீதியில் சுமையாகக் கருதக்கூடாது என்பதற்காகவும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையினை அதிகரிக்கும் பொருட்டும், அவா்களுக்கு உயா் கல்வியை உறுதி செய்யும் வகையிலும், பாலின இடைவெளியைச் சமன் செய்யும் பொருட்டும் புதுமைப் பெண் திட்டம் தொடா்ந்து இரண்டாம் கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது என்றாா்.

விழாவில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள், சேலம் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், மாவட்ட சமூக நல அலுவலா் நா.ரஞ்சிதாதேவி மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT