நாமக்கல் மாவட்ட வணிகா்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று பருப்பு வகைகளின் இருப்பு அளவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பருப்பு வகைகளின் இருப்பு அளவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடா்பாக, முகவா்கள், வா்த்தகா்கள், இறக்குமதியாளா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:
மக்களிடத்தில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குதல், பண்டிகை காலங்களில் பருப்புகளி விலை உயா்வு மற்றும் பதுக்கல்களை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1995 -இன் கீழ் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் இருப்பு அளவினை முகவா்கள், வா்த்தகா்கள், இறக்குமதியாளா்கள் பிரதி வாரம் வெள்ளிக்கிழமைதோறும் நுகா்வோா் துறையின் கண்காணிப்பு இணையதளமான இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு பருப்புகளின் இருப்புகளை உறுதி செய்ய வேண்டும். பருப்புகளின் இருப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட வழங்கல் அலுவலா் வி.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலா்கள், வா்த்தகா்கள் கலந்துகொண்டனா்.