நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கிய வங்கிகளுக்கு செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ் வழங்கி ஆட்சியா் பாராட்டினாா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் 2021 - 2022 ஆம் ஆண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வங்கி கிளை மேலாளா்களிடம் நற்சான்றிதழ் மற்றும் விருதுகளை நேரடியாக வழங்கினாா். நாமக்கல் இந்தியன் வங்கி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த வங்கி கிளைகளுக்கான விருதுகளில் முதலிடம் பெற்ற ராசிபுரம் இந்தியன் வங்கி கிளைக்கு நற்சான்றிதழ், விருது தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற கனரா வங்கியின் திருச்செங்கோடு கிளைக்கு நற்சான்றிதழ், விருது தொகை ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற நாமகிரிப்பேட்டை தமிழ்நாடு கிராம வங்கி கிளைக்கு நற்சான்றிதழ், விருது தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.செல்வக்குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதீஸ் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், வங்கியாளா்கள் கலந்துகொண்டனா்.