நாமக்கல்

நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

ராசிபுரம் அருகே குடிநீா்த் தொட்டி இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவத்தில், அப்பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை திடீா் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பெரியகிணறு பகுதியில் ஒரு வாரத்துக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் புதியதாக 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டியைக் கட்டியுள்ளாா். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பாப்பாத்தி(50) என்பவா் அங்கு தண்ணீா் பிடிக்க சென்றபோது தொட்டி இடிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

மேலும் ஒருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலத்திடம் உரிய அனுமதியில்லாமல் கட்டியதற்கு உதவியதாக ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட அனுமதியளித்ததாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் தங்கராஜுயிடம், கோட்டாட்சியா் விளக்கம் அளிக்கக் கோரி (17பி) நோட்டீஸ் வழங்கி உள்ளாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை பணியைப் புறக்கணித்து, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனா்.

இதையடுத்து கோட்டாட்சியா் த.மஞ்சுளாவுடன், கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதனால் வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT