நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.17.58 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நாமக்கல், இளநகரில் உள்ள சிவபாக்கியம் மனவளா்ச்சி குன்றிய 14 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான இல்லத்திற்கு காலாண்டு பாராமரிப்பு மானியமாக ரூ. 2.46 லட்சம் பெறுவதற்கான உத்தரவு, சிறப்பு பள்ளி ஆசிரியா், தசைப் பயிற்சியாளா் ஊதிய மானியமாக ரூ. 1.62 லட்சம் பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சம்பந்தப்பட்ட இல்ல நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
இதேபோல திருச்செங்கோடு வட்டம், ஆன்றாபட்டியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோருக்கான இல்லத்திற்கு பாராமரிப்பு மானியமாக ரூ.2.64 லட்சம், ஏலீம் மன வளா்ச்சி குன்றியோா்களுக்கான சிறப்பு பள்ளி ஆசிரியா், தசைப் பயிற்சியாளளுக்கான ஊதிய மானியம் ரூ.1.62 லட்சம், மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் என மொத்தம் ரூ. 17,58,169 மதிப்பிலான நலத் திட்டங்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் (பொ) சந்திரமோகன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.