நாமக்கல்லில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
நாமக்கல் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சாா்பில் நடத்தப்படும் முதலாவது மாவட்ட இளையோா் தடகளப் போட்டிகள், ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதனை, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடக்கி வைத்தாா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி, முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலா் க.கோகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆடவா்கள் 14 முதல் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்துகொண்டனா். இதில், முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெறுவோருக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.
சனிக்கிழமை நடைபெறும் பெண்களுக்கான போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க இருக்கின்றனா். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோா் திருவண்ணாமலையில் அக். 16 முதல் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பா். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தடகள விளையாட்டுச் சங்க துணைத் தலைவா்கள் டி.டி.பரந்தாமன், எஸ்.சசிகுமாா், ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.