நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோா், விதவையா், கல்வி, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 157 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
இந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவா், பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.